Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் ஏழைகளுக்கு உதவிப் பொருட்களை வழங்கினர்.
ராகுல் காந்தி தனது 51-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் இருந்ததால், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த ராகுல் காந்தி, அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவி செய்யுமாறு கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு காங்கிரஸார் உதவி செய்தனர்.
நடப்பாண்டும் கரோனா பாதிப்பு தொடர்வதால் தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என ராகுல் காந்தி நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், தமது பிறந்த நாளை சேவை தினமாக கடைபிடிக்க கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, ராகுல் காந்தியின் பிறந்த நாளான நேற்று, டெல்லி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துப்பொருட்களும் கட்சி சார்பில் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT