Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

புதுச்சேரியில் எம்எல்ஏ ஆதரவாளர்கள் ஆவேசம் - அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகம் முற்றுகை : கட்சிப் பெயர் பலகை கிழிப்பு; சாலை மறியல்

புதுச்சேரியில் பாஜக கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள்.படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரியில் அமைச்சர்கள் யாரும்இன்னும் பதவியேற்காத நிலையில்,பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரிஅவரது ஆதரவாளர்கள், கட்சித் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பாஜகவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸுக்கு பேரவை துணைத் தலைவர் மற்றும் 3 அமைச்சர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் அமைச்சரவை பட்டியலை முதல்வர் ரங்கசாமி ஆளுநரிடம் இதுவரை அளிக்கவில்லை. இதனால் அமைச்சரவை பதவியேற்பு தாமதமாகி வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, காமராஜ் நகர் தொகுதியில் எம்எல்ஏவாகி இருக்கும் ஜான்குமார் அமைச்சராக தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இவரது மகன் ரிச்சர்ட் என்பவரும் பாஜக சார்பில் போட்டியிட்டு நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏவாக ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் ஜான்குமாருக்கு பதிலாக மாற்று நபருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல்வெளியானது. இதை அறிந்த ஜான்குமார் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள், ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.

திடீரென பாஜக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை கிழித்தெறிந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். ‘உங்களது உணர்வுகளை மேலிடத்துக்குத் தெரியப்படுத்துவோம்’ எனக் கூறி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையே ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நெல்லித்தோப்பு சிக்னலில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர்.

இதற்கிடையே, பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம் ஆகியோர் டெல்லி விரைந்தனர். அங்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, அகில இந்திய பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினர்.அப்போது “சுழற்சி முறையில் அமைச்சர் பதவியை வழங்கலாம்” என்று பாஜக மேலிடம் கூறியதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x