Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM

கரோனா பாதிப்பில் எத்தனை அலை வந்தாலும் - யோகா கற்றுக் கொண்டால் சமாளிக்க முடியும் : ஆளுநர் தமிழிசை மக்களுக்கு அறிவுரை

சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் 50 - ஐந்து லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 - பத்து லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 பிபாப் கருவிகளை புதுச்சேரி அரசுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நிவாரணப் பொருட்கள் சுகாதாரத்துறைச் செயலர் அருணிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியை பொறுத்தவரை பொதுமக்களின் பங்களிப்பு மிகச்சிறப்பாக உள்ளது. அவர்கள்கொடுத்த உதவியால் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை சரி செய்து வருகிறோம்.

எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மூன்றாவது அலை என்னும் கொடூரமான சூழலை நாம் தவிர்க்க முடியும். அதற்காக சுகாதாரத்துறை பல திட்டங்களை அறிவித்திருக்கிறது. மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்த பரிசு திட்டங்களையும் அறிவித் திருக்கிறார்கள்.

ஜூலை 1-ம் தேதி தேதிக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தையும் அரசு அலுவலகங்களுக்கு சொல்லி இருக்கிறோம். விடுபட்ட முன்களப் பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்காக தடுப்பூசிதிருவிழா நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு உடல் நலக்குறைவு இருந்தால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கரோனாவில் இருந்து விடுபட்ட பிறகு, உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு யோகா மிகுந்த பலனைத் தருகிறது என்று சொல்கிறார்கள். இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி மருந்தை பயன்படுத்துகிறோமோ அதேபோல் யோகாவையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா உதவும். யோக கலையை கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும்.

தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு மூலம் நாம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறோம். தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்று நினைக்காமல், இன்றுவரை நாம் அபாய கட்டத்தில் தான் இருக்கிறோம் என்ற மனநிலையோடு அனைத்து எச்சரிக்கை நடைமுறைகளையும் பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

3-வது அலை நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி கொடுக்கப்படவில்லை. எனவே, வெளியே இருந்து வருபவர்களும், வீட்டில் இருப்பவர்களும் குழந்தைகளை கையாள் வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x