Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

கோயில்களின் நில விவரங்களை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் : அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவு

கோயில்களின் நில விவரங்களை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, கடந்த 1985-87 மற்றும் 2018-20-ம் ஆண்டு அரசு கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியுள்ள நில விவரங்களை சர்வே எண்ணுடன் பதில் மனுவாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களுடன் வருவாய்த் துறை பராமரித்து வரும் தமிழ் நிலம் மென்பொருளில் உள்ள ஆவணங்களை கணினி வழியாக ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

ஒருமித்து போகும் ஆவணங்கள்

தமிழ் நிலம் மென்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் முழுவதும் ஒருமித்துபோகக் கூடிய ஆவணங்கள், பகுதி வாரியாக ஒருமித்துப்போகும் ஆவணங்கள், புதிதாககண்டறியப்பட்ட நில ஆவணங்களை பிரித்து வகைப்படுத்த வேண்டும். அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். நிலங்களை கண்டறிந்து அது தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் ஆணையர் குமரகுருபரன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x