Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் சென்னையில் கைது :

நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், கொத்தவால்சாவடி என சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சஞ்சய் மங்கள் (25). இவர் கடந்த 13-ம் தேதி இரவு 10 மணி அளவில் அதே பகுதியில் உள்ள கல்லூரி சாலை - சுப்பாராவ் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர், கத்தி முனையில் மிரட்டி சஞ்சய்யின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சஞ்சய் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்த பரத்குமார் (19) என்பது தெரியவந்தது. இவர் 2 சிறுவர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து பலரிடம் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

சஞ்சய்யிடம் செல்போன் பறித்துச் சென்ற அதே நாளில் நுங்கம்பாக்கம் தாஜ் ஹோட்டல் அருகே நடந்து சென்ற அண்ணா நகர் பவித்திரன், குளக்கரை சாலை பகுதியில் நடந்து சென்ற நுங்கம்பாக்கம் தருண் பிரதாப் ஆகியோரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பரத்குமாரை போலீஸார் கைது செய்தனர். திருவொற்றியூர், கொத்தவால்சாவடி, புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தொடர்பாக சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது 8 குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 15, 17 வயதுடைய 2 சிறுவர்களும் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x