Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

பெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் :

பெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

பெரும்புதூர்: மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் கிராமத்தில் ஏற்கெனவே 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது அந்த கிராமத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளைச் சேர்ந்தவருக்கு மட்டும் 100 நாள் வேலை திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த அந்த கிராமம் சார்ந்த பெண்கள் நேற்று பெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம பெண்கள் சிலர் கூறியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்கள் ஒற்றுமையுடன் பணியாற்றி வந்தோம். தற்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் ஒற்றுமையுடன் இருந்த கிராமத்தில் அரசியல் சாயத்தைப் பூசி ஒருவருக்கொருவர் விரோதப் போக்கை கட்சிகள் ஏற்படுத்துகின்றன. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடந்தையாக உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணவும், தகுதியான பயனாளிகளுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x