Published : 17 Jun 2021 03:12 AM
Last Updated : 17 Jun 2021 03:12 AM

கரோனா முதல் அலையில் கணவரையும் இரண்டாவது அலையில் வேலையையும் இழந்ததால் - டீ விற்று குழந்தைகளை படிக்க வைக்கும் பெண் :

முதல் கரோனா அலையில்கணவரை இழந்த நிலையில், இரண்டாவது அலையில் பணிபுரிந்து வந்த ஹோட்டல் வேலையையும் இழந்ததால் குழந்தைகளை படிக்க வைக்க பெண் ஒருவர் தெருத்தெருவாக இருசக்கர வாகனத்தில் சென்று டீ விற்றுக் கொண்டிருக்கிறார்.

மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் மணிகண்டன் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது உடல் நலமில்லாமல் உயிரிழந்தார். இதனால் வாழ்வாதாரம் இழந்த கலைவாணி, தனது 10 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் இரு பெண் குழந்தைகளுடன் சிரமப்பட்டார். அதன் பிறகு தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து குழந்தைகளை படிக்க வைத்தார். கரோனா இரண்டாவது அலை ஊரடங்கால் கலைவாணி வேலை பறிபோனது. இதைத்தொடர்ந்து, தற்போது வரை வேறு வேலை கிடைக்காததால் தன் கணவரின் இரு சக்கர வாகனத்தில் டீ விற்கிறார். அவரது குழந்தைகளும் உதவியாக இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து கலைவாணி கூறுகையில், ‘‘குழந்தைகளை கஷ்டப்பட்டாவது படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கான நோட்டுகள் வாங்க வேண்டும். அன்றாட வாழ்வாதாரத்துக்கும் சிரமப்படுகிறோம். இந்த ஊரடங்கில் நிரந்தரமாக ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அதனால் டீ விற்கும் இந்த வேலையை செய்து வருகிறேன். கரோனா அச்சத்தால் பலரும் டீ வாங்கி குடிக்க அச்சப்படுகின்றனர். அதனால் ரொம்ப தூரம் சுற்றித்தான் கொண்டு வந்த டீயை விற்க வேண்டியுள்ளது. சத்துணவு பணியாளர் பணி கோரி விண்ணப்பித்துள்ளேன். அந்த பணியை வழங்கினால் என் குடும்பத்தின் வறுமை போய், தொடர்ந்து என் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். மாவட்ட ஆட்சியர் கருணை காட்ட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x