Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - 28, 29, 30-ம் தேதிகளில் எதிர்ப்பியக்கம் : கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அறிவிப்பு

சென்னை

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வரும் 28, 29, 30ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்படும் என்று முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலை உயர்வு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மீது கடும்தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வைதிரும்பப் பெற வேண்டும். இதன்மீதான கலால் வரிகளைக் குறைக்க வேண்டும்.

உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனையாவதைத் தடுத்து, தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கரோனா தொற்று, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு மாதம்ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மத்திய அரசை வலியுறுத்தி இயக்கங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் இவ்வியக்கத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x