Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

கோயில்கள் விஷயத்தில் - திமுகவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருத்து

கோவை தெற்கு தொகுதி எல்எல்ஏ வானதி சீனிவாசன், கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராகலாம் என அறநிலையத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக விஷ்வ இந்து பரிஷத் சார்பாக நீண்ட காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழில் அர்ச்சனை தற்போதும் கோயில்களில் நடைபெற்று வருகிறது. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் தமிழில் அர்ச்சனை செய்துகொள்ளலாம்.

ஏற்கெனவே மேல்மருவத்தூர் மற்றும் ஒரு சில சமுதாய கோயில்களில் பெண்கள் பூஜை செய்து வருகின்றனர். பேரூர் ஆதினம் பெண்களுக்கு ஆன்மிக பயிற்சி அளித்து அவர்கள் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். இதில் தமிழக அரசு எதையும் புதிதாக செய்யவில்லை. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோயில்களில் ஆகம விதிப்படிதான் பூஜை செய்ய வேண்டும்.

இதில் பக்தர்களின் உணர்வு, கோயில் நிர்வாகத்தின் ஆலோசனையின்படி கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். கோயில்கள் விஷயத்தில் திமுக அரசு காட்டும் முனைப்புதன்னிச்சையானதா? உண்மையாகவே இவர்களுக்கு ஆர்வம் இருந்து செய்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், கோயில் சொத்துகள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும். ஆதினங்கள், மடாதிபதிகளிடம் பேசி நம்பிக்கை ஏற்படுத்தி எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x