Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு - 83 மின்விசிறிகளை வழங்கிய லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத் :

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

கடலூர்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத் சார்பில் 83 மின்விசிறிகள் வழங்கப்பட்டது.

சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடலூர் மாவட்டத்தின் மருத்துவக் கல்லூரியாகவும், மாவட்ட கரோனா தடுப்பு மையமாகவும் உள்ளது. இதில் கடலூர்,மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டத்திலிருந்து கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மற்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் மின்விசிறி பழுது ஏற்பட்டு இருப்பதால் நோயாளிகள் காற்று வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதையறிந்த சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலனிடம் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டு பகுதியில் பழுதடைந்த மின் விசிறிகளுக்கு பதில் புதிய மின் விசிறிகளை ஜாமத் செலவில் வாங்கித் தருவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 83 மின்விசிறிகளை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் சார்-ஆட்சியர் மதுபாலன் தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், மருத்துவக் கல்லூரி முதல்வர்மிஸ்ரா, துணை கண்காணிப்பாளர் ஜெய உள்ளிட்ட மருத் துவர்களிடம் வழங்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது ஹலீம், செயலாளர் ஜாகிர்உசேன், பொருளாளர் ஹாஜா, நற்பணி குழு ஜவகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x