Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 80,834 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 71 நாட்களுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். இதன்மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 2 கோடியே 94 லட்சத்து 39,989 ஆனது.
கடந்த 2 நாட்களாக 4 ஆயிரத்தை தாண்டி காணப்பட்ட உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 3,303 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 70,384 ஆனது. தவிர கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 54,531 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 26,159 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரில் குணமடைவோர் 95.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 32,062 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 2 கோடியே 80 லட்சத்து 43,446 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தினசரி கரோனா பாதிப்பு 4.25 சதவீதமாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 37 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT