Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

கூட்டுறவுத் துறையில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே - 10 ஆண்டு அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜு : அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவுத் துறையில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார் செல்லூர் ராஜு என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை சரிசெய்து வெளிப்படைத் தன்மையான நிர்வாகமாக கூட்டுறவுத் துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும். தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கணினிக்கும், ஆன்லைனுக்கும் வித்தியாசம் தெரியாதவராக முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளார்.

மத்திய கூட்டுறவு வங்கியுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கும்போது கடந்த ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கிய விவரம் குறித்து ஆன்லைனில் எவ்வாறு பார்க்கமுடியும்?

துறையில் என்ன நடந்துள்ளது என்பது தெரியாமல் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார். ஆட்சியின் இறுதியில் அறிவிக்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடியில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணமே இல்லாத நிலையில் எப்படி கடன் வழங்க முடியும்? பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகையை அடமானம் வைத்து பணம் வழங்கியதாகவும், அதை தள்ளுபடி செய்து முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநிலம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வாரியாக ஆய்வு நடத்தப்படும். ஆய்வின் முடிவில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடான முறையில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் பதவிகளின் நிலை குறித்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு பின்பு தமிழக முதல்வருடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. விவசாயிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x