Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

மாநில இளைஞர் விருதுக்கு ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் :

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ‘மாநில இளைஞர் விருது’ தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கிய இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் 15 முதல் 35 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் செய்த தொண்டு, சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, மதிப்பு இந்த விருதுக்கான பரிசீலனையின்போது கணக்கில் கொள்ளப்படும். தகுதியுள்ளவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (‘www.sdat.tn.gov.in’) இம்மாதம் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x