Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

உதகை நகராட்சியில் தற்காலிக பணிக்கு நேர்காணல் : சமூக இடைவெளியை மறந்த இளைஞர்கள்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்வீடு,வீடாகச் சென்று தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தற்காலிகப் பணியாளர்களை நியமிக்க ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

அதன்படி, தற்காலிக பணியிடத்தை நிரப்பும் வகையில், உதகை நகராட்சியில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. 8-ம் வகுப்புபடித்தவர்கள் முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரைநேர்காணலில் கலந்துகொண்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முண்டியடித்தபடி இருந்தனர். நேர்காணலில் பங்கேற்றவர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி, செல்போன் எண், புகைப்படம் போன்ற விவரங்கள் பெறப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சரஸ்வதி கூறும்போது, ‘‘உதகை நகராட்சியில் கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணிக்காக தற்காலிகமாக 250 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்காணல் நடந்து வருகிறது. நர்சிங், மருத்துவம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் பிற கல்வித்தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தற்காலிகப் பணியாளர்களுக்கு நகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சியில் பணிபுரிய அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x