Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

உதகையில் தொடர் மழையால் - தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம் :

உதகையில் தொடர் மழையால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கள் அழுகின. இதனால், கரோனா விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரம் அகற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக 250 ரகங்களில் 5 லட்சம் மலர் செடிகள் தயார்படுத்தப்பட்டன. அதில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. இத்தாலியன் பூங்காவில் 60 ரகங்களில் பல்லாயிரம் டேலியா மலர்கள் வண்ணமயமாக பூத்திருந்தன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாடங்களில் வைக்கப்பட்ட மலர் தொட்டிகள் பாதிக்கப்படாத நிலையில், பூங்காவின் வெளி பகுதிகளில் பூத்த பல்வேறு மலர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வுக்காக 3000 மலர் தொட்டிகளைக் கொண்டு ‘தடுப்பூசி போடுங்க’ என்ற சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர் மழை காரணமாக தற்போது இந்த மலர் அலங்காரம் அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல வண்ணங்களில் மலர்ந்திருந்த பல்லாயிரம் டேலியா மலர்கள் மழையால் அழுகின. இவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டேலியா மலர்களைக் கொண்டு சில நாட்களில் வேறுஅலங்காரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் மலர்கள் அழுகியதால் பூங்கா ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x