Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

தமிழகத்துக்கு தடுப்பூசிகளை பிரதமர் உடனே வழங்க வேண்டும் : கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் இதுவரை 23 கோடியே 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை பிரதமர் மோடி தமது உரையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதில் 4 கோடியே 51 லட்சம் பேருக்கு மட்டுமே 2 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் கூறுவது மாயாஜால வித்தை போல இருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகவே, 2-வது டோஸ் போடுவதற்கான காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியை பெருக்காமல் கொள்கை முடிவுகளை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார்.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிஇலவசம் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.

தமிழகத்தைப் பொருத்தவரை தயக்கமின்றி அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முனைகின்றனர். ஆனால், மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்குவதால் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையிலும், தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும்தான் தடுப்பூசி பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். அரசியல் பாகுபாடு காட்டுவதன் மூலம் பிரதமர் கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாகவும், அரசியல் பாகுபாட்டுடனும் நடந்து கொள்கிறார்.

இத்தகைய அணுகுமுறையை பிரதமர் கைவிட்டு, தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x