Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
கோவை ரங்கே கவுடர் வீதியில் பகல்நேரங்களில் கடைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.
கோவை மாநகரில் தனியாக செயல்படுகிற மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் மளிகை மற்றும் பல சரக்கு கடைகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டுகள் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரைதிறக்கப்பட்டு, சில்லறை வியாபாரி களுக்கு விற்பனை செய்யலாம்.
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து, மளிகை மற்றும் பல சரக்கு மொத்த விற்பனை கடைகள் அதிகம் உள்ள ரங்கே கவுடர் வீதியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மளிகைப் பொருட்கள் வாங்க அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. நேற்று காலையும் கடைகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து, ரங்கே கவுடர் வீதிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் பகலில் கடைகளை திறக்க வேண்டாம் என வியாபாரிகளிடம் அறிவுறுத்தினர். இதற்கு மொத்த வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிறகு மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரவு தொடங்கி அதிகாலை வரை கடைகளை திறக்க ஒப்புக் கொண்டு, வியாபாரிகள் கடைகளை பூட்டி சென்றனர். இதனால் ரங்கே கவுடர் வீதி நேற்று பகலில் வெறிச்சோடி காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT