Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

காலை, மாலை இருவேளையும் ரேஷன் கடைகள் செயல்படும் : ஜூன் 11 முதல் நிவாரண உதவி டோக்கன் வழங்க முடிவு

தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையும் பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், காலை 8 முதல் 12 மணி வரை நியாயவிலைக்கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர், அனைத்து மாவட்டஆட்சியர்கள், சென்னை துணை ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடியஊரடங்குவரும் ஜூன் 14-ம் தேதி வரைநடைமுறைபபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நியாயவிலைக்கடைகள், அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரையும் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.

மேலும், கரோனா நிவாரணத்தின் 2ம் தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பு ஆகியவை வரும் ஜூன் 15-ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் ஜூன் 11 முதல் 14ம் தேதிவரை கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்றுஅரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கவேண்டும். அதே நேரம் ஜூன் 11 முதல் 14 வரை காலை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x