Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை கரோனாசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையாக மாற்ற சுகாதாரத்துறையிடம் வழங்கினார்.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் அலுவலகம் அமைந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன், இந்த அலுவலகம் பொதுப்பணித் துறையால் சீரமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில், தொகுதி மக்கள் நலன் கருதி தனது அலுவலகத்தை கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையாக மாற்ற ஜீ.வி. மார்க்கண்டேயன் சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி மருத்துவமனையாக மாற்றப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். பின்னர் அங்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் கனிமொழி எம்பிசெய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் நீட் தேர்வுஉள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக முதல்வர் ஆய்வுக் குழுவை அமைத்துள்ளார். கண்டிப்பாக நீட் தேர்வு இல்லாத நிலையை முதல்வர் உருவாக்கி காட்டுவார். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தந்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்’’ என்றார்.
மார்க்கண்டேயன் எம்எல்ஏ. கூறும்போது, “விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் நிலவும் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எனது அலுவலகத்தை கரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த ஒப்படைத்துள்ளேன். தமிழகத்தில் 5 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்கு பல திட்டங்களை தந்த கருணாநிதியின் பெயரில் இது மினி மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT