Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM
தொழிலாளர்களை தக்க வைப்பதில் சிரமங்களை சந்தித்துவரும் நிலையில், தங்கி பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு நூற்பாலைகளை இயக்க அனுமதிஅளிக்க வேண்டும் என தென்னிந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம் (சிஸ்பா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் கவுரவ செயலாளர் ஜி.வெங்கடேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது: தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எங்களது சங்க உறுப்பினர்கள் கடந்த ஒரு மாதகாலமாக நூற்பாலைகளை இயக்காமல். உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை ஆலைகளில் தங்க வைத்து, அவர்களுக்கு சம்பளம் அளிப்பதோடு, மூன்று வேளைகளும் உணவு அளித்து பாதுகாத்து வருகின்றனர். தொழிலாளர்களை வேலை இல்லாமல் தொடர்ந்து பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வேலை இல்லை எனக் கருதி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்படத் தயாராகி வருகின்றனர். இந்நிலை நீடித்தால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, நூற்பாலைகளை இயக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, தமிழக முதல்வர் இந்த ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு, தற்போது அறிவித்துள்ள தளர்வுகளுடனான ஊரடங்கு காலத்தில், தங்கி பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு, மாநில அரசுகளின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நூற்பாலைகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT