Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ மனுக்கள் தொடர்பாக - வட்டாட்சியர்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனை :

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வட்டாட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தாம்பரம்

தாம்பரம் கோட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறை சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண வட்டாட்சியர்களுடன் தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார். அதன் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும், அதற்கென தனித்துறை உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அத்துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு கடந்த மே 9-ம் தேதியன்று அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய வட்டங்களில் வருவாய்த் துறை தொடர்பாக 2,198 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் முதியோர், விதவை உதவித் தொகை, பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை தொடர்பான மனுக்கள் வரப்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தாம்பரம் கோட்டத்தில் உள்ள வட்டாட்சியர்களுடன் தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ மனுக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் மனுக்களின் மீது துல்லியமாக ஆய்வுகள் மேற்கொண்டு விரைந்து பதில் அளிக்க வேண்டும் என கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரம் கோட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறை சார்பில் வழங்கப்பட்ட 2,198 மனுக்களில் 60 சதவீதம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் மற்ற மனுக்கள் விசாரணையும் முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படும். முதியோர், விதவை உதவித் தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை விரைந்து பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா தொடர்பான மனுக்களுக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு காணப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x