Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
நாமக்கல் / சேலம்: பரமத்தி வேலூர் அருகே எஸ்.வாழவந்தியில் கனமழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.
பரமத்தி வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், எஸ்.வாழவந்தி, பாலப்பட்டி, மோகனூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இதில் எஸ்.வாழவந்தி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த ரஞ்சிதம் (65) என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் ரஞ்சிதம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது. கணேசன், அவரது மனைவி முத்தாயி (65) ஆகிய இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். கனமழையால் சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
காடையாம்பட்டியில் 41 மிமீ மழை
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூர் அடுத்த காடையாம்பட்டியில் 41 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பிற பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: தம்மம்பட்டி 37, மேட்டூர் 36.80, எடப்பாடி 33.30, ஆனைமடுவு 21, வீரகனூர் 17.50, கரியகோவில், கெங்கவல்லியில் தலா 17, ஏற்காடு 13.20, ஆத்தூர் 12.20, பெத்தநாயக்கன்பாளையம் 11, சேலம் 9.70, சங்ககிரி 8.10, ஓமலூர் 4.20, வாழப்பாடி 2 மிமீ மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT