Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

இந்தியாவில் 1.2 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி : சிகிச்சை பெறுவோர் 15.5 லட்சமாக சரிவு

இந்தியாவில் நேற்று புதிதாக 1.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதலாக வேகமாக பரவி வந்தகரோனா தொற்றின் 2-ம் அலை,கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளே வைரஸ் பரவல் குறைந்துவருவதற்கு காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 9 நாட்களாக 2 லட்சத்துக்கும் குறைவாகவே தினசரி பாதிப்பு பதிவாகி வருவது மக்களை ஆறுதலடைய செய்துள்ளது.

அதன்படி, நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 20,529 பேர் மட்டுமே புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகினர். இது, கடந்த 58 நாட்களுக்கு பிறகு பதிவாகும் மிகக்குறைந்த தினசரி பாதிப்பு அளவாகும். இதன் மூலம் நாட்டில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 55,248 ஆக குறைந் திருக்கிறது.

இதனிடையே, நேற்று ஒரே நாளில் பெருந்தொற்று பாதிப்புக்கு 3,380 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து,கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 44,082 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரை விட, குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1 லட்சத்து 97,894 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x