Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் - இன்று கனமழை பெய்ய வாய்ப்பு :

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வளிமண்டல சுழற்சிகள்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது. குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டி ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கோவா, கர்நாடகா கடலோரப் பகுதி முதல் தென் தமிழகம்வரை மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக 6-ம் தேதி தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்கள் சிலவற்றில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

7-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

8, 9-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருபுவனத்தில் 12 செ.மீ மழை

5-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 12 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 9 செமீ, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 8 செமீ, மதுரை மாவட்டம் பேரையூரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

வரும் 8, 9-ம் தேதிகளில் கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே அப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x