Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

126-வது பிறந்தநாளை முன்னிட்டு மலர் போர்வை போர்த்தி - காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர், அரசியல் கட்சியினர் மரியாதை :

காயிதே மில்லத் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

காயிதே மில்லத் 126-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் துயிலும் இடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினேன். பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர் வரிசையில் போற்றி வணங்கத்தக்க தலைவர்களில் ஒருவர்தான் காயிதே மில்லத். அவர் இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ் மொழியையும் காப்பாற்ற தொண்டுசெய்தவர் ஆவார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அவையில் நடந்த விவாதத்தின்போது, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை கொண்டுவர சிலர் முயன்றனர். அப்போது, அதை கடுமையாக எதிர்த்தார். இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாதுஎன்று சொன்னதோடு, தமிழைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று சொன்ன தமிழ் வீரர் காயிதே மில்லத்.

கடந்த 1972 ஏப்ரல் 4-ம் தேதிகாயிதே மில்லத் மறைந்தார். கருணாநிதி அவருக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கினார். காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கினார். காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் அளித்தார்.

மத நல்லிணக்கம் காப்போம்

அத்தகைய காயிதே மில்லத்நினைவை எந்நாளும் போற்றுவோம். அவர் உருவாக்கிய மத நல்லிணக்கம் காப்போம். அவரைப் போல தமிழ்ப் பற்றாளராக தமிழக வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிமுக, அமமுக மரியாதை

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

அமமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் மரியாதை செலுத்தினார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சிறுபான்மை மக்களுக்கான அரசியல் எழுச்சியின் அடையாளம், அனைத்து தரப்பினரும் மதித்துப் போற்றிய ஆளுமையான கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தை அவரது பிறந்தநாளில் போற்றுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x