Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் மற்றும் தடுப்பூசி முகாம் உள்ளிட்டவற்றை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். செல்லக்குமார் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் போது அமைச்சர் கூறியதாவது:
போலுப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும், அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
கரோனா நோய் பரவலை தடுக்க தமிழக முதல்வர் எடுத்த பல்வேறு முயற்சிகளால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் 30 ஆயிரம் படுக்கைகளுக்கு மேல் காலியாக உள்ளன. கரோனா 3-வது அலை வருவதாக தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. விரைவில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாறும் என்றார்.
ஆய்வில் முன்னாள் எம்எல்ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT