Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

சென்னையில் கடந்த 11 நாட்களில் - கள்ளச்சந்தையில் மது விற்ற 324 பேர் கைது :

சென்னை

கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்ததாக சென்னையில் கடந்த 11 நாட்களில் 324 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒருசிலர் மதுபான பாட்டில்களை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்று வருகின்றனர். மேலும் யூ-டியூப்பில் பார்த்து சிலர் வீட்டில் வைத்து சாராயம் தயாரித்து விற்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை 11 நாட்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 321 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 கண்டெய்னர் லாரிகள் என மொத்தம் 31 வாகனங்களை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் மொத்தம் 25,461 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 92 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2-ம் தேதி சோதனையின்போது 23,892 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 83 வாகனங்களும், 3-ம் தேதி சோதனையின் போது மொத்தம் 15,262 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 75 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x