Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து - சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை : பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று (ஜூன் 5)ஆலோசித்து, பின்பு இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது. மேலும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு இறுதி முடிவெடுக்க தமிழக அரசு தீர்மானித்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல், தொலைபேசிவாயிலாக பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவித்தனர்.

அவற்றில் 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந் நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, காணொலியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் அன்பில் மகேஸ்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு தொடர்பாககல்வியாளர்கள் உட்பட அனைத்துதரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. முதல்வரின் அறிவுறுத்தலின்படி சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களுடன் இன்று (ஜூன் 5) ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

மாணவர்களின் உடல்நலன், உயர்கல்வி உட்பட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு முதல்வர் முடிவு எடுப்பார். பிளஸ் 2பொதுத்தேர்வு நடத்தப்படும்பட்சத்தில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக போதுமான காலஅவகாசம் தரப்படும்.

இதுதவிர இணையதள வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஒப்புதல் பெற்று ஜூன் 7-ம் தேதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வு பற்றிமுடிவெடுத்தவுடன், தனியார் பள்ளிஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

அதேபோல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு வழங்குவது தொடர்பான வழிமுறைகள் விரைவில் வழங்கப்படும். தனித்தேர்வர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x