Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

தீவிர தூய்மைப் பணி மூலம் - சென்னையில் 10,254 டன் குப்பை, கழிவுகள் அகற்றம் :

சென்னை

சென்னையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற தீவிர தூய்மைப் பணி மூலம் 10,254 டன் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற, தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியிருந்தார்.

இதன்படி, கடந்த 27-ம் தேதி முதல் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், காலி இடங்களில் தேங்கியிருந்த குப்பை, சாலைகளில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக் கழிவுகள், நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகள் ஆகியவை தொடர்ந்து அகற்றப்பட்டு வருன்றன.

கனரக வாகனங்களில்..

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ``வழக்கமான நாட்களில் மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும். இதனால் கனரக வாகனங்கள் மூலம் குப்பை, கட்டிடக் கழிவுகளை அகற்றுவது சிரமமாக இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், கனரக வாகனங்களைக் கொண்டு குப்பை அகற்றப்படுகிறது.

இப்பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு கண்காணிப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு இடத்திலும் ஏற்கெனவே குப்பை இருந்த நிலை, அகற்றப்பட்ட பின் உள்ள நிலை என இரு படங்களை சமர்ப்பித்தால் மட்டுமே, குப்பையை அகற்றியதாக கணக்கில் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் 27-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரையிலான 8 நாட்களில் 2,528 டன் குப்பை, 7,726 டன் கட்டுமானக் கழிவுகள் என மொத்தம் 10,254 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த தீவிர தூய்மைப் பணி வரும் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x