Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

தற்போது 7 ஆண்டு மட்டும் செல்லத்தக்கதாக இருக்கும் - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

தற்போது 7 ஆண்டுகள் மட்டும் செல்லத்தக்கதாய் இருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ், இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்கும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். மத்திய அரசின் இந்த உத்தரவு கடந்த 2010 ஆகஸ்ட் 23 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ‘சி-டெட்’ தேர்வை மத்திய அரசு சார்பில் முன்பு சிபிஎஸ்இ-யும் தற்போது என்டிஏ எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை அமைப்பும் நடத்தி வருகின்றன. மாநில அளவிலான ‘டெட்’ தேர்வு நடத்தும் பொறுப்பு, அந்தந்த மாநில அரசுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ‘டெட்’ தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2012 முதல் நடத்தி வருகிறது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லத்தக்கது.

ஆசிரியர்கள் கோரிக்கை

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘நெட்’, ‘ஸ்லெட்’ தேர்வு தேர்ச்சி சான்றிதழ் போன்று ‘சி-டெட்’, ‘டெட்’ தேர்வு தேர்ச்சி சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக அறிவிக்க வேண்டும் என்று அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2013-ல் நடந்த சி-டெட், டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி சான்றிதழ், 2020-ம் ஆண்டு காலாவதி யாகும் நிலையில் இருந்தது.

இதனிடையே, ஆசிரியர்களின் வேண்டு கோளை ஏற்று தேர்ச்சி சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக அறிவிக்கும் வகையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகவில்லை. எனினும் என்சிடிஇ முடிவால் 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாமல் இருந்த சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்தச் சூழலில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டு காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழின் செல்லத்தக்க காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் என நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது முன்தேதியிட்டு (2011 முதல்) நடைமுறைப்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், ஏற்கெனவே வழங்கிய தேர்ச்சி சான்றிதழுக்கு பதில் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக புதிய தேர்ச்சி சான்றிதழை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும். ஆசிரியர் பணியில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை முக்கிய அம்சமாக அமையும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x