Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM
தமிழகத்தில் கருப்பு பூஞ்சைநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் 30 ஆயிரம் குப்பிகள் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்றுஎழுதியுள்ள கடிதம்:
கரோனா பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்தும் பணியில்தங்களது தொடர் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு எடுத்த கடும் முயற்சிகளால், தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதேநேரம், கரோனா நோயாளிகள் மத்தியில் கருப்பு பூஞ்சை நோய்அதிகரித்து வருகிறது. இதற்கானமருந்தான லிபோசோமல் ஆம்போடெரிசின் பி, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கருப்பு பூஞ்சை பாதிப்பு அறிவிக்கப்பட்ட நோயாக தமிழகஅரசால் அறிவிக்கை செய்யப்பட்டு, நோய் குறித்தும், பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கென மருத்துவமனைகள், தனிப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 673 பேர் கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அதற்கான ஆம்போடெரிசின் மருந்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
தமிழக அரசு ஏற்கெனவே, பல்வேறு நிறுவனங்களுக்கு 35 ஆயிரம் குப்பிகள் மருந்தை விநியோகிக்க உத்தரவுகளை வழங்கியுள்ளது. ஆனால், இந்த மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருவதால், தமிழகம் இதுவரை 1,790 குப்பிகள் மருந்தைமட்டுமே பெற்றுள்ளது. இது அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமானதாக இல்லை.
எனவே, தமிழகத்துக்கு 30 ஆயிரம் குப்பிகள் மருந்தை ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும்நோயாளிகளுக்கு வழங்க போதுமானதாக இந்த மருந்துகள் இருக்கும். இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT