Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நெல் விதைப்பு சாகுபடி குறித்த ஆன்லைன் பயிற்சி நடத்தப்பட்டது.
கோவையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக அங்கமான வேளாண் அறிவியல் நிலையம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையம் சார்பில் விவசாயி களுக்கு நேரடி நெல் விதைப்பு சாகுபடி தொடர்பான ஆன்லைன் முறை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவகுமார் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
நெல் சாகுபடியில் விவசாயி களின் செலவினங்களைக் குறைக்க நேரடி நெல் விதைப்பு சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
முனைவர் சிவகுமார் பேசும்போது, ‘தருமபுரி குறை வான மழைப்பொழிவு பெறும் மாவட்டம். எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு நெல் சாகுபடி சவாலாக உள்ளது. இதுதவிர, நெல் நடவுக்கு தேவையான தொழிலாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதன் காரணமாக உரிய நேரத்தில் நெல் நடவு செய்ய முடிவதில்லை.
இதற்கெல்லாம் நேரடி நெல் விதைப்பு சாகுபடி முறை தீர்வு தருகிறது. இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவும் குறையும். இந்த சாகுபடி முறைக்கு நேரடி நெல் விதைப்புக்கான கருவி மற்றும் கோனோவீடர் கருவி ஆகியவை பயன் தரும். நேரடி நெல் விதைப்பு சாகுபடி முறைக்கு ஆடிப் பட்டம் உகந்ததாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, முனைவர் சங்கீதா, நேரடி நெல் சாகுபடி முறையின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். நிகழ்ச்சி முடிவில், முனைவர் வெண்ணிலா நன்றி கூறினார்.
ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தருமபுரி மாவட்டம் மட்டுமன்றி மதுரை, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளும் பங்கேற்று பயனடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT