Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர் எவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
வெளியேற்றக் கூடாது
அதன்படி 2020-21-ம் கல்வியாண்டில் அனைத்துவித பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளின் தலைமைஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். அதேபோல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT