Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அறிக்கை: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்கள், மாநகராட்சி அனுமதி பெற்ற வியாபாரிகள் மூலம் மக்களின் வசிப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன. மளிகை பொருட்களையும் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கோட்டாறு பஜார் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோட்டாறில் மொத்த வியாபாரம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அனுமதிக்கப்படும். கோட்டாறு பஜாருக்கு மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வரும் சில்லறை வியாபாரிகள், மாநகராட்சியிலிருந்து கொள்முதல் அனுமதி சீட்டு பெற்று, அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணிக்குள் கொள்முதல் பணியை மேற்கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற வியாபாரிகள் தொலைபேசி அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாக மளிகை பொருட்கள் பட்டியலை பெற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யலாம். அனுமதி சீட்டில் உள்ள நிபந்தனைகளை மீறும் வியாபாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT