Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM
ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக வழங்க வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சத்தை கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரோனா கால நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் பொதுமக்களுக்கு மே இரண்டாவது வாரத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, சென்னை, சைதாப்பேட்டை காவிரி நகர், 1-வது தெருவில் ஒரே கட்டிடத்தில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் கடந்த 16-ம் தேதி பணி நேரம் முடிவடைந்த பின்னர், ஊழியர்கள் கடைகளை பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில் அன்று இரவு அந்தக் கடைகளின் கதவு பூட்டை உடைத்து, அங்கிருந்த பணப்பெட்டியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த கரோனா நிவாரண நிதி ரூ.7.36 லட்சம் திருடப்பட்டது. இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக ரேஷன் கடை அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் ரேஷன் கடையில் பணம் கொள்ளையடித்தது சின்ன காஞ்சிபுரம் வேங்கை வீதி தெருவைச் சேர்ந்த கோபி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் மீது அரக்கோணம், காஞ்சிபுரம் மற்றும் துரைப்பாக்கம் காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வீடு புகுந்து திருடுதல் என 7 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT