Published : 30 May 2021 03:14 AM
Last Updated : 30 May 2021 03:14 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட - நடிகர் வெங்கட் சுபா காலமானார் :

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்த நடிகர் வெங்கட் சுபா காலமானார். அவருக்கு வயது 60. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தமிழ்த் திரைப் படங்கள், சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக அடையாளம் பெற்றவர் வெங்கட் சுபா. ‘தேசிங்கு ராஜா’, ‘சிங்கம் 3’, ‘கொரில்லா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக் காரன்’, ‘கடுகு’, ‘சீதக்காதி’, ‘நரகாசுரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’, ‘திருமகள்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பிரியமானவளே’ உள்ளிட்ட நெடுந்தொடர்களிலும் நடித்தவர்.

பத்திரிகையாளர், எழுத்தாளரா கவும் பயணித்தவர். பல்வேறு முன்னணி திரையுலக பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பரான வெங்கட் சுபா, கடந்த சில ஆண்டுகளாக யூ-டியூப் சேனல், சமூக வலைதளங்கள் வழியே அதிக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்.

இவருக்கு 2 வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். அவருக்கு சுபா என்ற மனைவி, சித்தார்த் என்ற மகன் உள்ளனர்.

கரோனா நடைமுறைகளை பின்பற்றி, இறுதிச் சடங்குகளுக்கு பிறகு சென்னை கண்ணம்மா பேட்டை மின்மயானத்தில் அவரது உடல் நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x