Published : 29 May 2021 03:13 AM
Last Updated : 29 May 2021 03:13 AM

மழை நின்றதால் இயல்பு நிலை - வெள்ள அபாயம் நீங்கியது :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நின்றதால் இயல்பு நிலை திரும்பியது. அணைப் பகுதிகளில் நிலவிய வெள்ள அபாயமும் நீங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி முதல் பெய்த கன மழையால் வீடுகள், விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. 100-க்கும் மேற்பட்ட நகர, கிராமச் சாலைகள் மழை நீரால் துண்டிக்கப்பட்டன.

50-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்து தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது. 3 நாட்களாக மிரட்டிய கனமழை மற்றும் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது.

கடந்த இரு நாட்களாக மழை நின்றதையடுத்து நீர் வரத்து குறைந்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் நிலவிய வெள்ள அபாயம் நீங்கியது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 3,164 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 43.03 அடியாக உள்ளது. அணையில் இருந்து 513 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 73.92 அடியாக உள்ளது. அணைக்கு 2,667 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2,951 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றாறு ஒன்றில் 15.84 அடி, சிற்றாறு இரண்டில் 15.94 அடி, மாம்பழத்துறையாறில் 54.12 அடி, முக்கடல் அணையில் முழு கொள்ளளவான 25 அடி தண்ணீர் உள்ளது.

சாலைகள், வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வழியத் தொடங்கியுள்ளது.

ஜூன் மாதத்துக்கு முன்பே அணைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியை மீண்டும் தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x