Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM
புதுடெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு டாக்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ராம்தேவுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார். அதன்பின், ராம்தேவ் மன்னிப்பு கேட்டு அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநில இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐஎம்ஏ), ராம்தேவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறும்போது, ‘‘அலோபதி மருத்துவம், அலோபதி டாக்டர்கள் குறித்து நீங்கள் பேசியவற்றுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 15 நாட்களுக்குள் இதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 1,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுப்போம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் முன்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோவையும் வெளியிட வேண்டும் என்று ஐஎம்ஏ கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக, ராம்தேவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த திங்கட்கிழமை உத்தராகண்ட் மாநில முதல்வர், தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று ஐஎம்ஏ மாநில தலைவர் டாக்டர் அஜய் கன்னா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT