Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

தற்காலிக பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு : புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம்

புதுச்சேரியில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. முதல்வராக ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் 9-ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 17-ம் தேதி புதுச்சேரி திரும்பினார். இதனிடையே, சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் எம்எல்ஏவை பரிந்துரைத்து, ரங்கசாமி கடந்த 9-ம் தேதி அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் தமிழிசை அனுமதியளித்தார்.

இந்நிலையில் நேற்று, ஆளுநர் மாளிகை முதல் தளத்தில் சட்டப்பேரவையின் தற்காலிக தலைவர் பதவியேற்பு நிகழ்வு நடந்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, லட்சுமி நாராயணனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடந்தது. வழக்கமாக சட்டப்பேரவையில்தான் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறும். கரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளிய முறையில் இந்நிகழ்வு நடந்தது. முதல்நபராக முதல்வர் ரங்கசாமிக்கு எம்எல்ஏவாக தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு

‘நியமன எம்எல்ஏக்கள் மூவர் நியமனம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த 3 பேருக்கும் பதவி பிரமாணம் செய்யக் கூடாது’ என்று லட்சுமி நாராயணனுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களோடு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமனஎம்எல்ஏக்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x