Published : 21 May 2021 03:11 AM
Last Updated : 21 May 2021 03:11 AM

கரோனாவை தடுக்க புதுமையான உத்தியை கையாள வேண்டும் : பத்து மாநில அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

கரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுமையான உத்திகளை கையாள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

சத்தீஸ்கர், ஹரியாணா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்த 54 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு அலுவலர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களின் முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கரோனா வைரஸால் பல்வேறு புதிய சவால்கள் எழுந்து வருகின்றன. இதற்கு புதிய வியூகங்கள், புதிய தீர்வுகள் தேவைப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் பிரச்சினை முழுமையாக ஓயவில்லை. மாவட்ட அளவில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களின் அனுபவங்கள், சிந்தனைகள் தேசிய அளவில் கரோனா தடுப்பு கொள்கையை வரையறுக்க பேருதவியாக உள்ளன. மாநில அரசுகளின் ஆலோசனைகள், நிபுணர்களின் ஆலோசனைகளின்படி தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

கரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். கிராமங்களுக்கு தொற்று பரவ கூடாது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். கிராமங் களில் இருந்து கரோனாவை விரட்ட வேண்டும். நகரங்களில் கரோனா பரவுவதை தடுக்க வேண்டும்.

கரோனா வைரஸ் அடிக்கடி உருமாறுகிறது. அதற்கேற்ப வைரஸ் பரவலை தடுக்க நாமும் வியூகங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். புதுமையான உத்திகளை கையாள வேண்டும். உருமாறிய கரோனா வைரஸ் இளைஞர்கள், சிறாரை அதிகம் தொற்றுகிறது. இதை தடுக்க கரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

தடுப்பூசியை வீணாக்கக்கூடாது

ஒரு டோஸ் தடுப்பூசியைகூட வீணாக்கக் கூடாது. ஒரு டோஸ் மூலம் ஓர் உயிரை காப்பாற்ற முடியும். மக்களின் உயிர்களைக் காக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேநேரம் அவர்களின் வாழ்வா தாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக ஏழைகளுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

காணொலி கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலர்கள் கரோனா தடுப்புப் பணியில் தங்களது அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலான அரசு அலுவலர்கள், நவீனதொழில்நுட்பம் மூலம் வைரஸ்தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். அவர்களை மோடி பாராட்டினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x