Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

கருப்பு பூஞ்சைக்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி கடிதம்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான ஆம்போடெரிசின் பி மருந்து நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு மின்னஞ்சல் மூலம் கனிமொழி எம்.பி. நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருவதை தாங்கள் அறிவீர்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவருகிறது. கரோனா 2-வது அலை ஏற்பட்ட பிறகு, கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக பரவும் தொற்றுநோய் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றுக்கு லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து பயன்படுத்தப்படுகிறது. கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருவதால், ஆம்போடெரிசின் பி மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.

எனவே, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய சுகாதாரத் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்போடெரிசின் பி மருந்து உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதி செய்யவும் உடனடி முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆம்போடெரிசின் பி மருந்து தட்டுப்பாடின்றி எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, துறை செயலர் எஸ்.அபர்ணா ஆகியோருக்கும் கனிமொழி தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிஉள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x