Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

திடீர் மழையால் குளிர்ந்த சென்னை : சோழிங்கநல்லூரில் 3 செமீ மழை பதிவு

சென்னையில் கடந்த இரு வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் மாநகரம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது.

அரபிக் கடலில் உருவான ‘டவ் தே’ புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்திருந்த நிலையில், சென்னையில் பல நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. வெயில் கடுமையாக வாட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை, சென்னை மாநகரப் பகுதிகளை கருமேகங்கள் சூழ்ந்தன. இதனால் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக சாரல் மழையே பெய்தது.

குறிப்பாக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், தரமணி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் மாலை நேரத்தில் மாநகரில் குளிர்ந்த சூழல் நிலவியது.

ஊரடங்கு காரணமாக அனைவரும் வீடுகளில் முடங்கிய நிலையில், இந்த சாரல் மழையை அனைவரும் ரசித்தனர். புறநகர் பகுதிகளில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, சோழிங்கநல்லூரில் 3.4 செமீ, மேற்கு தாம்பரத்தில் 2.8 செமீ, மீனம்பாக்கத்தில் 2.3 செமீ, செம்பரம்பாக்கத்தில் 1.6 செமீ, வில்லிவாக்கத்தில் 1.5 செமீ, சென்னை நுங்கம்பாக்கத்தில் 3 மிமீ, நந்தனத்தில் 1.2 மிமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x