Published : 19 May 2021 03:15 AM
Last Updated : 19 May 2021 03:15 AM
வேலூர்: வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க விருப்ப மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதையேற்று பெரு நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், மாதாந்திர சம்பளதாரர்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க முன் வந்துள்ளார். இது தொடர்பாக பெண்கள் தனிச் சிறை அதிகாரிகளிடம் நளினி நேற்று அளித்துள்ள மனுவில் ‘‘தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது வைப்பு நிதி தொகை குறித்தும் அவரது விருப்பத்தின்பேரில் அதில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக சிறைத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘நளினி அளித்துள்ள விருப்ப மனுவின் மீது சிறைத் துறை தலைமையிடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே அவரது வைப்புத் தொகையில் இருந்து ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும். விரைவில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அந்தப் பணம் அனுப்பப்படும்’’ எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT