Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக தேர்வு :

மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடோ மாகாணம், ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் 74 நாடுகளை சேர்ந்த பெண்கள் போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு கட்ட போட்டிகளுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.

இதில் மெக்ஸிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா (26) பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2019-ம்ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி தென்ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, மகுடத்தை சூட்டினார்.

பிரேசிலை சேர்ந்த ஜூலியா காமா 2-வது இடத்தையும், பெருவை சேர்ந்த ஜானிக் மெக்டா 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்திய பெண் அட்லின் கேஸ்டிலினோவுக்கு 4-வது இடம் கிடைத்தது.

பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஆண்ட்ரியா மெஸா, கணினி மென்பொறியாளர் ஆவார். மெக்ஸிகோவின் சிஹுவாஹுவா நகரில் 40-க்கும் மேற்பட்டோருடன் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார். பெண்கள் உரிமை, விலங்குகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஆண்ட்ரியா கூறும்போது, ‘‘எனது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்வேன்" என்று தெரிவித்தார். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x