Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

அரசுக் கல்லூரி சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல் :

பல்லடம் தொகுதிக்குட்பட்ட பல்லடம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம், அரசுக் கல்லூரி கரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து, திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பல்லடம் அரசு மருத்துவமனை கரோனாவார்டில், 40 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதிகொண்டவை. இதில் ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளையும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, பல்லடம் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், ஆக்சிஜன் தேவையில்லாத சாதாரண நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளிக்க முடியும். இங்கு புதிய நோயாளிகள் சிகிச்சை பெறவும் உதவிகரமானதாக இருக்கும். எனவே, பல்லடம் அரசுக் கல்லூரி கரோனா சிகிச்சைமையத்தினை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். தொகுதிக்குட்பட்ட அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள செவிலியர் பணியிடம் உட்பட 10-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ரெம்டெசிவர் மருந்து எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x