Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

பவானி ஆற்றில் வெள்ள அபாயம் - தயார் நிலையில் தீயணைப்புத் துறையினர் :

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேரிடர் கால மீட்புக் கருவிகளுடன் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘டவ் தே’ புயல் காரணமாக, கடந்த இரு நாட்களாக கோவை உள்ளிட்ட தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மற்றும் கேரளகாடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக கொண்டுள்ள பவானியாற்றில் நீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் பில்லூர்அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மொத்தம் 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையில், கடந்த இரு நாட்களில் மட்டும் சுமார் ஏழு அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியுள்ளது.பில்லூர் அணைக்கு விநாடிக்கு ஆறாயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டத்தை சீராக வைக்கும் வகையில்,அதே அளவுக்கு நீர் வெளியேற்றப் படுகிறது. இதன்மூலம் அணையில் நீர்மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

ஆற்றில் தண்ணீர் திறப்பு மற்றும் மழை தொடரும் பட்சத்தில் பவானியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை யினர் தயார் நிலையில் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, “அவசரகால மீட்பு ஊர்தி வரவழைக்கப்பட்டுள்ளதோடு, ரப்பர் படகு, புயல் மழையால் சாயும் மரங்களைவெட்டி அகற்றும் ‘பவர் சா’ இயந்திரங் கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொள் வோரை மீட்க கான்கிரீட் கட்டர் மற்றும் ட்ரில்லர், தெர்மல் கேமரா, ஆறு டன் வரை எடையை தூக்கும் ஹைட்ராலிக் மெஷின் என நவீன கருவிகளோடு மொத்தம் 24 பேர் இரண்டு ஷிப்ட் அடிப்படையில், 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x