Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM
மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கரோனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்ட்டர் அமைத்து முன்னுரிமை வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவை அமைக்க வேண்டும். பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கென தனி வரிசை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும்.
தேவைக்கேற்ப, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT