Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

கரோனா ஊரடங்கால் உற்பத்தி பாதிப்பு - சிறப்பு ஊக்கத் தொகுப்பை அறிவிக்க அரசுக்கு கொடிசியா வலியுறுத்தல் :

கோவை

கரோனா முழு ஊரடங்கால் உற்பத்தியை இழந்துள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் எம்.வி. ரமேஷ்பாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

கரோனா தொற்றின் 2-வது அலையால் தொழில் துறை சரிவைசந்தித்துள்ளது. இதனால், வருமானத்தை இழந்துள்ள சூழலில் வங்கிக்கடன், வரி, மின் கட்டணம் செலுத்த முடியாமல் குறு, சிறு நிறுவனங்கள் திணறி வருகின்றன. இந்தியாவில் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் கேந்திரங்களாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. நேரடியாக 12 கோடி பேருக்கும், மறைமுகமாக 20 கோடி பேருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கின்றன.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்.

சிறப்பு ஊக்கத் தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். அவசர காலக்கடன் உதவித் திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதனக் கடன்அல்லது ரொக்கக் கடன் வசதிஆகியவற்றில் கூடுதலாக 20 சதவீதம் கடன் உதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும். வங்கிக்கடன் வட்டிக்கான தள்ளுபடி, மின்சாரக்கட்டணம் தள்ளுபடி, வருமான வரி, ஜி.எஸ்.டி. சலுகைகள் குறித்தும்அறிவிப்புகளை வெளியிட வேண்டும். கரோனா நன்கொடை வழங்குவோருக்கு, 100 சதவீதம் வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. மற்றும் வருமானவரி யில் தொழில் நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்கும் தொகையை போர்க்கால அடிப்படையில் விடுவிக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட எரிபொருளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள்கொண்டுவர வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை வளாகத்தில் தங்கும் வசதியை ஏற்படுத்த அரசு மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x