Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பயன்படும் தடுப்பூசிகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், மருந்துகளையும் மாநிலஅரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவைகள் வரி) கவுன்சிலுடன் கலந்துபேசி, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறிப்பிட்ட காலத்துக்கு பூஜ்ய சதவீதம் என நிர்ணயிக்க வேண்டும்.
கரோனா தொற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய்வளர்ச்சி பெருமளவு குறைந்துள்ளது. அதை ஈடுசெய்ய 3 நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்.
அதன்படி, நிலுவையில் உள்ளஜிஎஸ்டி இழப்புத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்க வேண்டியுள்ள அரிசி மானியத்தையும் உடனே விடுவிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான கூடுதல்மேல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதியுதவி அளிக்கப்பட வேண்டும்.
இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ள தேவைப்படும் நிதியைத் திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ள கடன்வாங்கும் அளவை மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம் என்றஅளவில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT