Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM
கரோனா பரவலை கட்டுப்படுத்த, தருமபுரி உழவர் சந்தை மூடப்படுவதுடன், தற்காலிகமாக 15 மையங்களில் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேளாண் வணிகப் பிரிவு துணை இயக்குநர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தருமபுரி நகரில் செயல்படும் உழவர் சந்தை மூடப்படு கிறது. மே 12-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும். அதேநேரம், பொதுமக்கள் நலன் கருதி தருமபுரி நகரில் 15 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைத்து காய்கறி விற்பனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வர்.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை, ஆவின் நகர், நகர போக்குவரத்து கழக பணிமனை அருகிலுள்ள முத்துமாரியம்மன் கோயில், உழவர் சந்தை அருகில், வட்டார வளர்ச்சி அலுவலர் காலனி, நரசய்யர் குளம், காந்தி சிலை அருகில், அன்னசாகரம் சாலை, நெசவாளர் காலனி, மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், பிடமனேரி மாரியம்மன் கோயில், ரயில் நிலையம் செல்லும் சாலை, வெண்ணாம்பட்டி குடியிருப்பு,பாரதிபுரம் 60 அடி சாலை, செந்தில் நகர் ஆகிய மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
அரசு அனுமதி அளித்துள்ள நேரத்தில் மட்டுமே விற்பனை நடைபெறும். காய்கறிகள் வாங்க வரும்போது அவசியம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT